ஒரு நாள் 🐜கட்டெறும்பு மரத்தில் ஏறிக் கொண்டிருந்த போது பலமான காற்று வீசியது. காற்றையும் மழையையும் எதிர்கொள்ள முடியாமல் கட்டெறும்பு மரத்தடியில் உள்ள குளத்தில் விழுந்தது.கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.🐦குருவி ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு, இறக்கும் தருவாயில் இருக்கும் கட்டெறும்பைப் பார்த்தது.பார்த்த உடனே மரத்தின் கிளையில் இருக்கும் இலையை பறித்து கீழே உள்ள குளத்தில் கட்டெறும்பை நோக்கி வீசியது.அந்த இலை குளத்தில் தண்ணீரில் விழுந்தது.இலை தண்ணீரின் மேலே மிதப்பதை கண்ட கட்டெறும்பு தன் முயற்சியால் முயன்று இலையின் மேலே ஏறி அமர்ந்தது.கப்பலைப் போன்று இலை குளத்தின் தண்ணீரில் மிதந்து,கரையை அடைந்தது. பின்னர் கட்டெறும்பு இலையிலிருந்து கீழே இறக்கி தரையை அடைந்தது.குருவியைக் கண்ட கட்டெறும்பு, குருவியிடம்"நண்பனே என் ஆபத்தில் எனக்கு உதவி செய்து எனது உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி, இந்த உதவியை நான் என் உயிருள்ளவரை மறவேன் " என்று கூறி விடைபெற்றது. சிறிது காலம் கழிந்த பின் காலை நேரத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜கட்டெறும்பு தன் கூட்டத்தோடு எப்பொழுதும் போல் உணவு தேடிச் செல்லும் வழியில் வேடன் ஒருவனைக் கண்டது. அந்த வேடன் மரத்தின் கிளையில் அமர்ந்த குருவியை நோக்கி அம்பு எய்த தொடங்குவதை கண்ட கட்டெறும்பு தன் உயிரைக் காப்பாற்றிய குருவியை வேடனிடமிருந்து காக்கும் பொருட்டு, தன் கூட்டத்தோடு சேர்ந்து வேடனின் கால்களை கடித்து வைத்தது. உடனே வேடன் எறும்பின் கடியை பொறுத்துக் கொள்ள இயலாமல் கையிலிருந்த அம்பை கீழே போட்டுவிட்டு கால்களை உதற ஆரம்பித்தார். அப்போது வேடன் கால்களை உதறுவதையும்,அம்பு தரையில் கிடப்பதை கண்ட குருவி, கட்டெறும்பு தான் நன்றி மறவாமல் தன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளது என்பதனை சூசகமாக அறிந்த பின் கட்டெறும்புக்கு நன்றி தெரிவித்து, அந்த இடத்தை விட்டு பறந்து வேடனிடமிருந்து தப்பிச் சென்றது.
நீதி- "காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது",என்பதுபோன்று ஆபத்து நேரத்தில் குருவி கட்டெறும்புக்கு உதவியது.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது", என்றவாறு எந்தவொரு பிரதிபலிப்பும் எதிர்பாராமல் குருவி கட்டெறும்பிற்கு உதவியது.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்",என்பது போல குருவி செய்த உதவியை கட்டெறும்பு மிகப் பெரியதாய் எண்ணியது. "உப்பிட்டவரை உள்ளளவும் நினை","ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை","நன்றி மறப்பது நன்றன்று","எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு",என்பதை உணர்ந்து கட்டெறும்பு குருவி செய்த உதவியை என்று மறவாமல் இருந்தது.
"தினை விதைத்தவன் தினை அறுப்பான்",என்பதைப் போன்று குருவி முன்னொரு காலத்தில் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்த உதவி பின்னொருநாள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்துக் காலத்தில் கட்டெறும்பின் மூலம் உதவியைப் பெற்றது. எனவே நாம் நமக்கு ஒருவர் செய்த உதவியை என்றும் மறவாமல் இருப்போம். வாய்ப்புக் கிடைத்தால் உதவி செய்தவருக்கு பதிலுதவியாகத் தம்மால் இயன்ற அளவாவது உதவி செய்வோம்.நாம் ஒருவருக்கு எதை செய்கின்றோமோ அதுவே பின்னொரு நாள் நம்மை வந்து அடையும்.ஆதலால் என்றும் பிறருக்கு நன்மையே செய்வோம்,அதுவே நம் ஆபத்துக்காலத்தில் நம்மை வந்து காக்கும்.
ஆகவே,"நன்மையை விதைத்து நன்மையையே அறுவடை செய்வோம்".
கருத்துகள்
கருத்துரையிடுக