பாலைவனத்தில் ஒரு 🦓 வரிக்குதிரையும் , ஒரு 🐫 ஒட்டகமும் வசித்து வந்தது. வரிக்குதிரை தாம் தான் ஒட்டகத்தை விட அழகாக இருக்கின்றோம், அதனால் தாம் தான் சிறந்தவன் என்ற கர்வத்தோடு இருந்தது. ஒருநாள் ஒட்டகம் வரிக்குதிரையிடம் "நண்பா நாம் இருவரும் மண்ணில் விளையாடலாம் வா" என்று அழைத்தது. வரிக்குதிரையோ, ஒட்டகம் தம்மை போன்று அழகாக இல்லை, ஒட்டகம் தம்மோடு ஒப்பிடுகையில் தாழ்ந்தவன், தனக்கு நண்பனாக இருக்க ஒட்டகம் தகுதியற்றவன் என்று மனத்திரையில் எண்ணிக்கொண்டது. வரிக்குதிரை, ஒட்டகத்திடம் "நான் மண்ணில் விளையாடினால் எனது உடலிலுள்ள அழகான வெள்ளை கருப்பு நிற கோடுகளில் மண் ஒட்டுவதோடு அது என் அழகை கெடுக்கும், அழகுதான் முக்கியம் நான் விளையாட வர மாட்டேன்" என்றது. இதைக்கேட்ட ஒட்டகம் தான் மட்டும் மண்ணில் விளையாடி மகிழ்ந்தது. சிறிதுகாலம் கழித்து பாலைவனத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, அருகிலிருந்த நீர்நிலைகள் வற்றின. வரிக்குதிரை அருந்த தண்ணீரின்றி தவித்தது. அப்போது தான் தன் அழகை மட்டும் வைத்து ஒன்றும் பயனில்லை என்று எண்ணி ஒட்டகத்திடம் "தாகமாக உள்ளது தயவுகூர்ந்து நிவீர் சேர்த்த தண்ணீரைத் தந்து உதவு இல்லையேல் நான் இறக்க நேரிடும்" என்றது. ஒட்டகம் "என்னிடம் நான் சேமித்த தண்ணீர் உள்ளது ஆனால் அதைத் தர இயலாது, அது எனது முதுகில் உள்ளது கவலைப்படாதே தண்ணீர் இருக்கும் இடத்தை என்னால் கண்டுபிடிக்க இயலும், நான் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு உன்னை அழைத்துச் சென்று உதவுகிறேன் என்றது". ஒட்டகமும் வரிக்குதிரையும் நீர் தேடிச் செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் அதிகமுற்றதால் வரிக்குதிரையின் கால்கள் வலித்தது, வரிக்குதிரை ஒட்டகத்திடம் "வெயிலால் கால்கள் நடக்கும் களைப்பில் வலிக்கிறது கண்கள் சோர்வடைந்துள்ளது உனக்கு கால்கள் வலிக்கவில்லையா?" என்றது. ஒட்டகம் "என் கண் இமைகள் பெரியதாக இருப்பதால் அது என் கண்களை சூரிய ஒளியில் இருந்து காக்கின்றது, மேலும் என் கால்கள் தரையின் சூட்டைத் தாங்கி எளிதாக பாலைவனத்தில் நடப்பதற்காகவே இறைவன் என் கால்களை வலிமையாக படைத்துள்ளார், நீங்கள் என் மீது ஏறுங்கள் நான் பத்திரமாக நீரிருக்குமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன்" என்றது. வரிக்குதிரை "உங்களால் என்னை சுமக்க முடியுமா?" என்று ஒட்டகத்திடம் கேட்டது. ஒட்டகம் "பாலைவனத்தில் மக்கள் என் மீது சவாரி செய்தே பயணிக்கின்றார்கள் அதனால் கவலை கொள்ளாமல் என் மீது ஏறி தாங்கள் பயணிக்கலாம்" என்று வரிக்குதிரையிடம் சொன்னது. பின்னர் வரிக்குதிரை ஒட்டகத்தின் மீது சவாரி செய்து நீர்நிலையை அடைந்து தண்ணீர் பருகியது. தண்ணீர் பருகியவுடன் வரிக்குதிரை ஒட்டகத்திடம் "முன்பு நான் தங்கள் உருவம் கொண்டு மின்னுவது மட்டும் அழகு என்று உங்களை மதிப்பிட்டது என் தவறு அதனை இப்போது உணர்ந்தேன், நீங்கள் பாலைவனத்தில் வாழத் தங்களுக்கு ஏதுவாக இறைவன் தங்களைப் படைத்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன், இப்போது அனைத்து உயிர்களையும் மதிக்கிறேன், உங்களின் நட்பைப் பெற விரும்புகின்றேன்" என்று கூறியது.ஒட்டகமும் வரிக்குதிரையின் நட்பை ஏற்றது.ஒட்டகத்தின் நட்பைப்பெற்று வரிக்குதிரை சிறந்து வாழத்தொடங்கியது.
நீதி- கண்களால் பார்ப்பதற்கு அழகானது மட்டும் அழகன்று உள்ளத்தால் அனைவருக்கும் மனமுவந்து உதவுவதே சிறந்த அழகாகும் என்பதைப் போன்று ஒட்டகம் வரிக்குதிரைக்கு உதவி செய்து உண்மையான நண்பனானது.
இப்பூமியில் அனைத்து உயிர்களையும் தனித் தனித் திறமையோடு அவர் அவர்கள் வாழ ஏதுவாக இறைவன் படைத்துள்ளார். ஆதலால் இப்பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் சிறந்தவையே.
கருத்துகள்
கருத்துரையிடுக