காட்டில் 🐰 முயலும் 🐢 ஆமையும் நண்பர்களாக இருந்தது. ஒருநாள் முயல் ஆமையிடம் "நாம் ஓட்டப்பந்தயம் வைத்து நம்மில் யார் வலிமையானவர்? என்று தெரிந்து கொள்வோம்" என்றது. ஆமையும் "சரி" என்றது. அடுத்த நாள் முயல் ஆமையிடம் " தூரத்திலுள்ள அந்த மரத்தடியில் யார் முதலில் சென்றடைகின்றார்களோ! அவரே வெற்றியாளர் என்றது. சரி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கலாம் என்று கூறி இரண்டும் ஓடத்தொடங்கியது. சிறிது தூரம் ஓடிய பின் களைப்புற்ற முயல் "ஆமை மிகவும் மெதுவாக வருவதால் சிறிது நேரம் உறங்கி ஓய்வு பெற்று ஓடினாலும் நான் தான் வெல்வேன் " என்று மனதில் நினைத்துக்கொண்டு உறங்கியது. ஆமை தண்ணீரில் தான் வேகமாக செல்லும், இருப்பினும் தான் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று நேர்மறை எண்ணம் கொண்டது. ஆமை தன் முயற்சியால் மெதுவாக சென்று முயல் உறங்கிய நேரத்தில் மரத்தடியை முதலில் சென்றடைந்தது. தூங்கி எழுந்ததும் முயல் , மரத்தடியில் ஆமை இருப்பதை கண்டவுடன், ஆமையை குறைவாக மதிப்பிடுதல் தவறு, முயற்சி செய்தால் தம்மால் செய்ய முடியாது என்ற ஒன்றையும் சிறப்பாக செய்து முடிக்கலாம் என்பதை உணர்ந்து மரத்தடியில் சென்று "ஆமையே நீங்கள் தான் வெற்றியாளன்" என்று கூறியது. அதன்பின் ஆமை "இன்று நீங்கள் உறங்கியதால் நான் முயன்று வெற்றி பெற்றேன், இல்லையேல் நீங்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தூங்காமல் ஓடினால் என்றும் மண்ணில் என்னைவிட நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் எப்பவும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள்" என்றது. மறுநாள் ஓட்டப்பந்தயத்தில் முயல் நேற்று போல் உறங்காமல், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஆமையை ஓட்டப்பந்தயத்தில் வென்றது. அடுத்த நாள் ஆமை "குளத்தில் ஓட்டப்பந்தயம் வைக்கலாம்" என்று கூறி போட்டியை ஆரம்பித்தது. முயலால் குளத்தில் பங்கேற்று போட்டியில் வெல்ல முடியவில்லை ஏனெனில் குளத்தில் இறங்கினால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடும், அதனால் முயல் குளத்தில் இறங்கவில்லை. குளத்தில் வைத்த போட்டியில் ஆமை தான் வென்றது. மறுநாள் இரண்டும் ஒருசேர ஏகமனதாக "நாம் இருவரும் வலிமையானவர்கள்"என்று கூறிக் கொண்டது. ஆமை முயலிடம் "மண்ணில் நீங்கள் தான் வெற்றியாளன், தண்ணீரில் நான் தான் வெற்றியாளன், தண்ணீரில் என் மீது ஏறுங்கள் இருவரும் வெற்றி பெறலாம்" என்று கூறியது. முயலும் "நீங்கள் கூறுவது சரிதான் மண்ணில் நீங்கள் வரும் வரை நான் காத்திருந்து இருவரும் ஒரே நேரத்தில் மரத்தடியை அடைந்து இருவரும் வெற்றி பெறுவோம், தண்ணீரில் உங்கள் உதவியால் இருவரும் வெற்றி பெறுவோம், என்று கூறியது. அடுத்த நாள் குளத்தில் முயல் ஆமை மீது பயணித்தும், மறுநாள் மண்ணில் ஆமை வரும் வரை காத்திருந்து பயணித்து ஒரே நேரத்தில் மரத்தடியை அடைந்து இரண்டும் இருவேறு திறமையையும் ஒன்றாக சேர்த்து ஒருவருக்கொருவர் உதவி செய்து போட்டியில் பங்கேற்றதால் இரண்டும் இரு இடங்களில் ஒன்றாக வெற்றி பெற்று மகிழ்ந்தது.
நீதி- முதல் நாள் வைத்த போட்டியில் முயல் அலட்சியமாக ஆமையை குறைத்து மதிப்பிட்டு உறங்கியதால் போட்டியில் தோற்றது. ஆகையால் "எவரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது". ஆமை தன் திறமையால் முடியாது நான் போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தால் ஆமை தன் முயலாமையால் வென்றிருக்க முடியாது. ஆமையோ
"முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை
இன்மை புகுத்தி விடும். "என்ற நேர்மறை எண்ணத்தில் செயல்பட்டதால் தன் திறமையால் வெல்ல முடியாததையும் தன் முயற்சியால் வெல்ல முடியும் என்று செயல்பட்டு அதனை நிரூபித்து முயலை வென்றது. இரண்டாவது நாள் போட்டியில் முயல் உறங்காமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தன் திறமையை வைத்து வெற்றி பெற்றது. மூன்றாம் நாள் ஆமை தன் திறமையால் குளத்தில் முயலை வென்றது.
இரண்டும் தனித்தனியாக பிரிந்து விளையாடியதால் முதல் மூன்று போட்டிகளில் ஒருநாள் ஒருபோட்டியை ஒருத்தர் தான் வெல்ல முடிந்தது. இதிலிருந்து நாம் அறிவது யாதெனில் "முயல் ஒருநாள் ஜெயித்தால், ஆமையும் ஒருநாள் ஜெயிக்கும், ஆனால் முயலாமை என்றும் ஜெயிக்காது".நான்கு, ஐந்தாவது போட்டிகளில் இருவரும் ஒன்றாக தன் திறமையால் ஒருவரை ஒருவர் உதவி செய்து கொண்டதால் தான் இருவரும் இருவேறு தன்மையுடையவர்களாய் இருப்பினும் ஒரு நாள் ஒரு போட்டி என இரண்டு நாட்களிலும் இருவரும் ஒன்றாக வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவி செய்தால் ஒருவரால் முடியாததை இன்னொருவர் உதவியால் அனைத்திலும் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக